கடந்த  1970ல் பாலிவுட் டைரக்டர் யாஷ் சோப்ரா துவங்கிய நிறுவனம் யாஷ் ராஜ் பிலிம்ஸ். இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸை இப்போது யாஷ் சோப்ராவின் மகனும் இயக்குநருமான ஆதித்யா சோப்ரா நிர்வகிக்கிறார். இவர் ஷாருக்கான் நடித்த புகழ்பெற்ற தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே திரைப்படத்தை டைரக்டு செய்தார். இந்த நிலையில் யாஷ் சோப்ரா மற்றும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் பற்றிய 4 பாகங்களைக் கொண்ட தி ரொமாண்டிக்ஸ் என்ற ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் யாஷ் சோப்ரா குறித்தும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் இந்தியத் திரையுலகுக்கு அளித்த பங்களிப்பு பற்றியும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். ஸ்மிருதி முந்த்ரா இந்த ஆவணப்படத்தை இயக்கி உள்ளார்.

இதனிடையே அனுஷ்கா சர்மா அளித்த பேட்டியில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ரப் நே பனா தி ஜோடி படம் பற்றி கூறியிருப்பதாவது “இப்படத்தின் வாயிலாக நான் அறிமுகமாவது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார் ஆதித்யா சோப்ரா. ஆகவே படம் வெளிவரும் வரை இதுகுறித்து யாருக்கும் தெரியாது. நான் தான் கதாநாயகி என்பதும் வெளியில் தெரியக்கூடாது என்றார். படம் தொடர்பாக நீ யாரிடமும் மூச்சுவிட கூடாது, உன் பெற்றோரிடம் கூட சொல்லக்கூடாது என்று ஆதித்யா சோப்ரா கூறியதை கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்” என்று அவர் கூறினார்.