கனடா நாட்டில் பிறந்த நடிகை நேரா பதாகி தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ரோர்-டைகர்ஸ் ஆஃப் தி சுந்தரபான்ஸ் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிக அளவில் குத்து பாடல்களுக்கு நடனமாடி வரும் நிலையில் பாகுபலி திரைப்படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருந்தார். அதன்பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தில் டோர் நம்பர் ஒன் என்ற குத்துப்பாட்டுக்கும் நேரா பதாகி நடனமாடியுள்ளார். இந்நிலையில் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நேரா பதாகி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, என்னுடைய முதல் படத்திற்கான சூட்டிங் சுந்தரபான்ஸ் காடுகளில் நடைபெற்றது. அப்போது என்னுடைய சக நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததால் நான் கோபத்தில் அவரை அறைந்து விட்டேன். அவரும் என்னை ஓங்கி அறைந்தார். அதன்பிறகு என் தலை முடியை இழுத்து என்னிடம் சண்டை போட்டார். நானும் அவரின் முடியை இழுத்து சண்டை போட்டேன். அது என் வாழ்வில் நடந்த மிகவும் மோசமான ஒரு சண்டையாகும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் இதைக் கேட்ட கபில் ஷர்மா அந்த நடிகர் தண்டிக்கப்படுவார் என்று கூறினார்.