அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இரண்டாவது கொல்கத்தா வருகை, சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட கடுமையான நிர்வாகக் குறைபாடுகளால் சனிக்கிழமை அன்று பெரும் குழப்பத்தில் முடிந்தது. பாதுகாப்பு குளறுபடியால் மெஸ்ஸி மைதானத்தில் 30 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருந்துள்ளார்.
I am deeply disturbed and shocked by the mismanagement witnessed today at Salt Lake Stadium. I was on my way to the stadium to attend the event along with thousands of sports lovers and fans who had gathered to catch a glimpse of their favourite footballer, Lionel Messi.
I…
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2025
சுமார் காலை 11:35 மணியளவில் மைதானத்துக்குள் நுழைந்த அவர், உடனடியாக மோகன் பகான் ஆல் ஸ்டார்ஸ் மற்றும் டைமண்ட் ஹார்பர் ஆல் ஸ்டார்ஸ் அணிகளின் வீரர்களுடன் கைகுலுக்கினார். இருப்பினும், பத்திரிகை தகவல் நிறுவனத்தின் தகவலின்படி, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் நூற்றுக்கணக்கானோர் மெஸ்ஸியைச் சூழ்ந்து கொண்டதால், பார்வையாளர்களுக்கு அவரைக் காண முடியாத நிலை ஏற்பட்டது.
டைமண்ட் ஹார்பர் ஆல் ஸ்டார்ஸ் அணியில் இருந்த முன்னாள் இந்தியக் கால்பந்து வீரர் லால் கமல் பௌமிக், “நான் மைதானத்துக்குள் வந்ததிலிருந்து இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நடந்து கொண்டிருக்கிறேன். என்னதான் நடக்கிறது?” என்று மெஸ்ஸி தனது குழுவிடம் அதிருப்தியுடன் தெரிவித்ததாகத் தகவல் அளித்துள்ளார். மைதானத்தில் சுமார் 35 நிமிடங்களே இருந்த மெஸ்ஸி, குழப்பம் காரணமாக உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
ரூபாய் 4500 முதல் பத்தாயிரம் வரை கட்டணம் செலுத்தி மெஸ்ஸியைக் காண வந்திருந்த ரசிகர்கள், அவரைக் காண முடியாத ஏமாற்றத்தில் மைதானத்தில் பாட்டில்களை வீசியும், கண்ணாடி இருக்கைகளைச் சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் தலையிட வேண்டியிருந்தது.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான சதத்ரு மற்றும் அவரது குழுவினருக்கும் மெஸ்ஸியின் குழுவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் குழப்பத்தைக் கண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மைதானத்தின் வாசலில் தனது காரில் 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் வெளியேறினார்.
இதற்கிடையே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்தச் சம்பவத்திற்காக மெஸ்ஸி மற்றும் அனைத்து ரசிகர்களிடமும் வருத்தம் தெரிவித்ததுடன், ஓய்வு பெற்ற நீதிபதி அஷிம் குமார் ரே தலைமையில் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோரைக் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்து இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிகழ்வின் முக்கிய அமைப்பாளரான சதத்ருவை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், ரசிகர்களுக்கு டிக்கெட் தொகையைத் திருப்பி அளிப்பதாக அவரிடம் எழுத்துப்பூர்வமான வாக்குறுதியைப் பெற்றுள்ளனர்.
