மும்பை மற்றும் தானேவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறிய மஜிவாடாவில் உள்ள லோதா காம்ப்ளக்ஸ் குடியிருப்பு வளாகத்தில், வெள்ளநீரில் பாம்பு ஒன்று நீந்துவது கண்டறியப்பட்டு பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து பெய்யும் மழையால் நீர்மட்டம் உயர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நுழைவது பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது. மும்பை மற்றும் தானேவில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்கனவே பொதுமக்கள் பெரும் இடையூறுகளை எதிர்கொள்ளும் நிலையில், இத்தகைய வனவிலங்கு தோற்றம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
#Thane: Snake spotted slithering in Lodha complex, Majiwada, sparking panic among residents. #MumbaiRains #Maharashtra #Monsoon pic.twitter.com/R0QSMyG8c0
— Podcast and news (@Podcast_news9) August 19, 2025
இதேவேளையில், தானேவில் நடந்த மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவத்தில், வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கிய இருவரை, இரண்டு இளைஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காட்சி வீடியோவாக பதிவாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு வெள்ளை நிற கார் அண்டர்பாஸில் மூழ்கி, முன்பகுதி நீரில் அமிழ்ந்த நிலையில், பின்பகுதி சற்று உயர்ந்து இருந்தது.
இதனால் காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணி வெளியேற முடியாமல் தவித்தனர். இதை கண்ட இரு இளைஞர்கள், மங்கிய வெள்ளநீரில் நீந்திச் சென்று, ஒருவர் காரின் பின்பகுதியை அழுத்தி, பயணிகள் வெளியேற உதவினார். மற்றவர் அவர்களை பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தார். இந்த துணிச்சலான செயல், மும்பையின் உண்மையான உதவும் மனப்பான்மையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
