கடந்த சில நாட்களுக்கு முன் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ரயில் வாயிலாக  சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ காட்சி வெளியாகியது. இதையடுத்து தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் மதுரையில் அகில இந்திய சங்குத்தேவன் விஜய்சேதுபதி ரசிகர்கள் எனும் பெயரில் அபாயம் #Boycott_Vadakkans போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.

அதோடு அந்த போஸ்டரில் இது தமிழ்நாடா..?, வடநாடா..? விழித்துக்கொள் தமிழா எனும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளது. வடமாநில தொழிலாளர்களின் வருகைக்கு எதிராக நடிகர் விஜய்சேதுபதி ரசிகர்கள் என கூறப்படும் சிலர் மதுரை முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. போஸ்டரில் அச்சிடப்பட்ட சில வார்த்தைகள் வடஇந்தியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினரை இவ்வாறு குறிப்பிடுவது ஒருபோதும் சரியாகாது எனவும் சமூகஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.