நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் அப்துல் கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திர எழுத்தர். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று அப்துல் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மதியம் குன்னூர்-ஓட்டுப்பாறை சாலையில் இருக்கும் பள்ளிவாசலுக்கு செல்வதற்காக அப்துல் தாலுகா அலுவலக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பழைய அருவங்காடு நோக்கி சென்ற அரசு பேருந்து அப்துல் மீது மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அப்துல் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்துலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.