கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்குணத்தில் மாட்டின் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மகள் உள்ளார். கடந்த 8-ஆம் தேதி ஜான்சி ராணியின் பாட்டி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதனால் தனது பாட்டியின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக ஜான்சி ராணி கல்குணம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான சண்முகசுந்தரம் இறப்பு சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டததாக தெரிகிறது.

இதுகுறித்து ஜான்சி ராணி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜான்சி ராணி சண்முகசுந்தரத்திடம் கொடுத்துள்ளார் அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சண்முகசுந்தரத்தை கையும் களவுமாக கைது செய்தனர். அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.