நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும், 2026 தேர்தலில் இலக்காக வைத்து களம் இறங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கழக கட்டமைப்பு விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம் பனையூரில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த உறுதிமொழி அறிக்கை  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தோழர்களின் உறுதிமொழி.

“நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச்  செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக்  கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி அளிக்கின்றேன்”