கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை மோதல், ஆட்டத்தைத் தாண்டி ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தால் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டபோது, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலைத் தானும் சேர்ந்து பாடியது கேமராவில் சிக்கியுள்ளது.

அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், அந்தப் பாகிஸ்தான் ரசிகர் காட்டிய இந்த விளையாட்டு உணர்வு மற்றும் அன்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த ரசிகரே இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர, அது தற்போது மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது. “எத்தனை இந்தியர்களால் இதுபோல செய்ய முடியும்?” என்ற கேள்வியோடு பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு, “விளையாட்டு என்பது நாடுகளை இணைக்கும் பாலம்” என ரசிகர்கள் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதியடைந்தது குறிப்பிடத்தக்கது.