மும்பையில் நடைபெற்ற ‘சைபர் விழிப்புணர்வு மாதம் அக்டோபர் 2025’ தொடக்க விழாவில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது டீனேஜ் மகள் நிதாராவுக்கு நேர்ந்த திகிலூட்டும் அனுபவத்தைப் பகிர்ந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் வீடியோ கேமில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அறியப்படாத நபர் ஒருவர் முதலில் ‘நன்றி’, ‘நன்றாக விளையாடினாய்’ போன்ற நட்பான செய்திகளை அனுப்பியதாகவும், பின்னர் திடீரென ஆபாச புகைப்படங்களைக் கேட்டதாகவும் அக்ஷய் கூறினார்.

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி, சைபர் குற்றங்களின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

அக்ஷய் குமார் மேலும் கூறுகையில், “ஆன்லைன் கேமில் அந்நியர்களுடன் விளையாட அனுமதி இருந்தது. முதலில் நயமான பேச்சு, பாராட்டு என்று தொடங்கியவர், பின்னர் பெண்ணா, ஆணா என்று கேட்டார். பெண் என்று தெரிந்ததும், உரையாடலின் தொனி மாறியது,” என்றார்.

அதிர்ஷ்டவசமாக, அவரது மகள் உடனடியாக கேமை மூடிவிட்டு, நடந்தவற்றை தனது தாயிடம் பகிர்ந்து கொண்டார். இதுபோன்ற சைபர் குற்றங்கள், முதலில் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் மைனர்களை சுரண்ட முயல்வதாகவும், இது பிளாக்மெயில் மற்றும் தற்கொலை போன்ற துயர சம்பவங்களுக்கு வழிவகுக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார். இந்த மாதம் முழுவதும், குறிப்பாக குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆன்லைன் பாதுகாப்பு குறித்து கல்வியூட்டுவதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.