துபாயில் கென்ய நாட்டைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை, அவரது காரில் பயணித்த ஒருவர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கென்ய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வேலைக்காகத் துபாய்க்கு வந்த பிரையன் கிப்ளிமோ (Brian Kiplimo) என்ற கென்ய நாட்டவர் ஆவார்.
View this post on Instagram
டேஷ்கேமராவில் பதிவான இந்த வீடியோவின்படி, பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி, ஓட்டுநரான பிரையன் கிப்ளிமோவுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார். ஓட்டுநர் அதை எதிர்த்தபோது, அந்தப் பயணி அவரை கழுத்தைச் சுற்றிக் கட்டி (Chokehold) மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் தாக்கியுள்ளார்.
உயிருக்குப் பயந்த ஓட்டுநர், ஓடும் காரில் இருந்து குதித்து வெளியேறியுள்ளார். அதன் பிறகு, தாக்குதல் நடத்திய அந்தப் பயணி கார் ஓட்டுநர் இருக்கைக்கு மாறி, காரைத் திருடிச் சென்றுள்ளார்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவியதால், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும், வளைகுடா நாடுகளில் நிலவும் அச்சுறுத்தல்கள் குறித்தும் கடுமையான விவாதம் எழுந்துள்ளது. கென்ய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் பயனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
