தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் விழுப்புரத்தில் சப்-கலெக்டராக இருந்த ஷஜீவனா  நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தேனி மாவட்டத்தின் 18-வது ஆட்சியராக ஷஜீவனா நேற்று பொறுப்பேற்றுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். மேலும் 29 ஆண்டுகளாக அரசு பணியில் உள்ள இவர் ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் போன்ற பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். இவரின் திறமையான பணிக்காக விருதுகள், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும்  பெற்றுள்ளார்.

மேலும் மாவட்டத்தின் 2-வது பெண் ஆட்சியராக  பொறுப்பேற்ற ஷஜீவனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, சென்னையில் நடந்த புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் களத்தில் மக்களோடு மக்களாக நின்று பணியாற்ற வேண்டும் என்றும் அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை தேடிச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி நானும் முனைப்புடன் செயல்படுவேன். அதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு பாதுகாக்கவும், மேம்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்துவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.