பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு நீண்டகால நண்பனாக இருந்த ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தற்போது கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் நெருக்கம் காட்டி வருவதும், அந்நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பதும் அமீரகத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக, பாகிஸ்தான் வாங்கிய 2 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க அமீரகம் மறுத்துவிட்டது.

பலமுறை கோரிக்கை விடுத்தும் வெறும் இரண்டு மாதங்கள் மட்டுமே அவகாசம் வழங்கிய அமீரகம், வரும் ஏப்ரல் 17-க்குள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் எனக் கறாராகக் கூறிவிட்டது.

இதுமட்டுமின்றி, இந்தக் கடனுக்கு 6.5 சதவீத வட்டியையும் வசூலிக்க அமீரகம் முடிவு செய்துள்ளதால் ஷெபாஸ் ஷெரீப் அரசு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாடியுள்ளது. ஏற்கனவே சவுதிக்கு 5 பில்லியன் டாலர், சீனாவுக்கு 4 பில்லியன் டாலர் எனப் பெரும் கடன் சுமையில் இருக்கும் பாகிஸ்தானுக்கு, அமீரகத்தின் இந்த அதிரடி முடிவு ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போல அமைந்துள்ளது.