மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் பகுதியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற இரண்டு மாணவர்கள் சரியான நேரத்திற்குத் தொடருந்து கிடைக்காததால் தேர்வு மையத்திற்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. புவியியல் தேர்வு எழுத வேண்டிய அந்த மாணவர்கள் பதற்றத்துடன் காவல்துறையின் உதவி எண்ணைத் தொடர்பு கொண்ட நிலையில் தானே நகர போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்.

 

போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இரண்டு காவலர்கள் தங்களது இருசக்கர வாகனங்கள் மூலம் மாணவர்களைச் சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்யாண் தேர்வு மையத்திற்குச் சில நிமிடங்களிலேயே பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் விரைவாகச் செயல்பட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காத்த காவல்துறையினரின் இந்தச் செயலைத் தேர்வுக் காலங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இத்தகைய அவசர காலங்களில் மாணவர்கள் உதவி பெறத் தனித்துவமான எண்களையும் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.