கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும்,  தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத வெள்ளத்தையும் இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து என்.டி.ஆர்.எப்-பிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று தான் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இதைத்தான் நானும் மாண்புமிகு பிரதமர் அவர்களை நேரில் சந்தித்தபோது வலியுறுத்தி குறிப்பிட்டு இருக்கிறேன். மனுவாகவும் கொடுத்துள்ளேன். ஆனால் இன்று வரை இந்த ரெண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை.

என்.டி.ஆர்.எப் இல் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது எஸ்.டி.ஆர்.எப்-க்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணைத் தானே தவிர கூடுதல் நிதி அல்ல. சவாலான நிதிநிலை சூழல் இருக்கின்ற இந்த நேரத்திலே ஒன்றிய அரசு இந்த கூடுதல் நிதியை தராத போதிலும்…. மக்களின்  நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு நிதியை செலவிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

சென்னையில் நிவாரண உதவி, மீட்பு பணிகளுக்கும் 1500 கோடி ரூபாய்க்கு கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. நான் இன்று இங்கு அறிவித்திருக்கக்கூடிய நிவாரண உதவிகளுக்கும்,  பணிகளுக்கும் 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் இன்றி சேதமடைந்துள்ள சாதைகள், பாலங்கள்,  குடிநீர் திட்டங்கள்,  மருத்துவமனைகள் பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை சீரமைப்பதற்கு பெரும் நிதி தேவைப்படும்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அதே நேரத்தில் இந்த வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை…. குறிப்பாக சாலைகள், பாலங்கள்,  மருத்துவமனைகள், மின் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை சீர்  செய்யும் பணிக்காக தமிழ்நாடு அரசு உடனடி முன்பனமாக மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 250 கோடி ரூபாயை விடுவிக்க ஆணையிட்டுள்ளேன். அதோடு மேலும் தாமதம் இன்றி இந்த இரண்டு பேரிடர்களையும் கடும் பேரிடர்களாக அறிவித்து ஒன்றிய அரசு என்.டி.ஆர்.எப்பில் இருந்து கோரப்பட்டுள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு சார்பிலும்,  தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்.