தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ரயில்வே இருப்புப் பாதை சீரமைப்பு பணி காரணமாக திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையே அனைத்து முன்பதிவு இல்லாத ரயில்களும் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக சேதம் அடைந்த செய்துங்கநல்லூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் இடையேயான ரயில் இருப்பு பாதையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.

இதனால் திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் தளத்தில் அனைத்து முன்பதிவு இல்லாத ரயில்களும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி இடையேயான முன்பதிவு இல்லாத ரயிலும் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுகின்றது. அதனைப் போலவே வாஞ்சி மணியாச்சி மற்றும் திருச்செந்தூர் தடத்தில் ரயில் சேவை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.