மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் பகுதியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் முகுந்த். இவன் எலும்புப் புற்றுநோயால் (Metastatic bone cancer) பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரபல டாட்டா மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். தொடர் சிகிச்சைகளால் சோர்வுற்றிருந்த அந்தச் சிறுவனிடம் அவனது ஆசை என்னவென்று கேட்டபோது, “ஒரு முறையாவது லம்போகினி காரில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளான்.

சிறுவனின் இந்த ஆசை குறித்து ImPaCCT அறக்கட்டளையைச் சேர்ந்த அனிருத் என்பவர் லம்போகினி நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பினார். எந்தவித தயக்கமும் காட்டாத அந்த நிறுவனம், உடனடியாகச் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தது.

மருத்துவமனை வாசலுக்கே வந்து நின்றது அந்த விலையுயர்ந்த லம்போகினி கார். முகுந்த் மற்றும் அவனது தாயை ஏற்றிச் சென்ற அந்த கார், மும்பை நகர் முழுவதும் நீண்ட தூரம் பயணம் செய்தது.

மருத்துவமனையின் ஊசி மற்றும் மருந்து வாசனையில் இருந்து விடுபட்டு, காரின் ஜன்னல் வழியாக வந்த காற்றை அனுபவித்த அந்தச் சிறுவன், மகிழ்ச்சியில் திளைத்தான்.

பயணம் முடிந்ததும் முகுந்த் லம்போகினி கார் ஷோரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்குள்ள ஊழியர்கள் அவனுடன் நேரத்தைச் செலவிட்டதோடு, காரின் நுணுக்கங்கள் குறித்த அவனது கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்தனர். “என் வாழ்க்கையிலேயே இதுதான் மிகச் சிறந்த நாள்” என முகுந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளான்.