கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற 12-ஆம் வகுப்பு மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அப்போது அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியே சோகமாக நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரித்தபோது பள்ளி மாணவி கிரிஜா என்பவரின் தந்தை பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஞானவேல்(45) பொம்மை செய்யும் தொழிலாளியாக இருந்து வந்தார்.

இன்று அதிகாலை ஞானவேல் உடல்நல குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக இறந்தார். இதை அறிந்து அதிர்ச்சியான அவரது மகள் கிரிஜா இன்று பிளஸ் 2 கடைசி தேர்வு என்பதால் தன் தந்தை இறந்ததை அடுத்து கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்து தேர்வு எழுதியுள்ளார். இச்சம்பவம் பள்ளி மற்றும் ஊர்மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.