திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குழந்தைசாமி என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அங்கு 25-க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 29-ஆம் தேதி தலைமை ஆசிரியர் தலைமையில் பள்ளியின் கால அட்டவணை தயாரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்  நடைபெற்ற போது வேதியியல் ஆசிரியர் சின்னமணி, இயற்பியல் ஆசிரியர் கோவிந்தசாமி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆபாச வார்த்தைகளால் இருவரும் திட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்தி பிரித்து வைத்தனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் விசாரணை நடத்தி 2 ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமியிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் கூறியுள்ளார்.