கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், தவரக்கரை கிராமம் அருகே, நொகனூர் காப்புக்காட்டில் இருந்து, 10 வயதுடைய பெண் யானை, எதிர்பாராதவிதமாக, மின் மோட்டாரின் இன்சுலேட்டட் வயரை கடித்து, நவம்பர்  26ல், பரிதாபமாக உயிரிழந்தது. வனவிலங்கு அதிகாரிகளின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, வனவிலங்கு குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் கார்த்திக் (25) கைது செய்யப்பட்டார்.

பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தற்செயலாக யானை மீது மின்சாரம் தாக்கியதை கார்த்திக் ஒப்புக்கொண்டார்.  விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில், ஏற்படுத்தப்பட்ட  சொட்டு நீர் பாசனத்திற்கான மின்சார கேபிள் இணைப்பு என தெரிவித்தார். இதையடுத்து விவசாயி கைது செய்யப்பட்டு, தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.