பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் வாயிலாக தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் (www.mygov.in) தமிழ்நாட்டின் பெயர் “Tamil Naidu” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டு இருப்பது எழுத்துப் பிழை என மட்டும் கருதி கடந்து போகமுடியாது. அரசு இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவையாகும். அதில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக் கூடாது. இது உலகரங்கில் நாட்டிற்கு அவப் பெயரை தேடித் தரும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவுசெய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்..? என அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.