புதுச்சேரி உழவர்கரை பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (28). இவர் லாஸ்பேட்டை பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதி இரவு புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒரு இனிப்பகத்திற்கு தன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஸ்ரீதர், சாவியுடன் வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு கடைக்குள் போயுள்ளார். அதன்பின் இனிப்பு வாங்கிக்கொண்டு வெளியில் வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே இதுகுறித்து ஸ்ரீதர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அதில் 30 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் மதுபோதையில் ஸ்ரீதரின் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற போதை ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.