கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த பெண் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த பெண் கீழ்ச்செருவாய் பகுதியை சேர்ந்த கவியரசனின் மனைவி தமிழ்ச்செல்வி என்பது தெரியவந்தது. தமிழ்ச்செல்வி காதல் கலப்பு திருமணம் செய்துள்ளார். தமிழ்ச்செல்வியின் கணவர் கவியரசன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர் தமிழ்ச்செல்வி வெளியே செல்லும் போதெல்லாம் ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் 2 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். ஆனால் அவர்களை கைது செய்யவில்லை. இதனால் 2 பேரும் தொடர்ந்து தமிழ்ச்செல்விக்கு தொந்தரவு அளித்ததால் மன உளைச்சலில் தீக்குளிக்க முயன்றதாக தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். அவரை போலீசார் சமாதானப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.