மத்திய பிரதேசம் மாநிலம் கட்னி மாவட்டத்தில் கஸ்தூர்பா காந்தி விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் தங்கள் பள்ளி சீருடை அணிந்தபடி சப்பாத்தி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயார் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது. அதேபோல் பல்வேறு சமையல் பணிகளில் மாணவிகள் ஈடுபடும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி பிரித்வி பால் சிங் கூறியதாவது, “மாணவிகள் சமையல் பணிகளில் ஈடுபடுவது போன்ற வீடியோ வைரலானது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் மாணவிகளை இது போன்ற வேளைகளில்  ஈடுபடுத்துவது சரியல்ல. இது குறித்து மாவட்ட டி.சி.பி-யிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூறியுள்ளார்.