விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கேத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் வெறி நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தெருவில் நடந்து சென்றவர்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இந்நிலையில் தெருவில் விளையாடிய ஹேமலதா என்ற குழந்தை, பாக்கியம், பூமி லட்சுமி, நாகஜோதி உள்பட 13 பேரும் தெருநாய் கடித்ததால் படுகாயமடைந்தனர். இதில் பாக்கியம் நாயை பார்த்ததும் அச்சத்தில் ஓடினார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த பாக்கியத்தின் முகத்தில் நாய் கடித்ததால் படுகாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து படுகாயமடைந்த 13 பேரையும் பக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெறிநாய் சுற்றி திரிவதால் தெருக்களில் நடமாட முடியாமல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.