கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சோனகர் தெருவில் பால் வியாபாரியான ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்க்கும் பூனை நேற்று நீண்ட நேரமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தது இதனால் ஷேக் தனது வீட்டு வளாகத்தில் சுற்றிப் பார்த்தபோது ஒரு பாம்பு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சேக் பாம்பு பிடி வீரரான செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செல்லா சுமார் 4 1/2 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தார். அந்த பாம்பு பிடிபட்ட இடத்திற்கு அருகே 28 முட்டைகள் கிடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு முட்டை இட்டு அதனை அடைகாத்து வந்தது தெரியவந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் பாம்பையும், முட்டைகளையும் பார்வையிட்டு சென்றனர். இதனையடுத்து பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.