நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முனியப்பம்பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இலக்கியா(9), அதன்யா ஸ்ரீ(4 1/2) சபரீசன்(1 1/2) என்ற மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் வேலுச்சாமி கள்ளுகடை மேடு பகுதிக்கு வேலைக்கு சென்றார். இதனையடுத்து முனியப்பன் பாளையத்திலிருந்து தனது குழந்தைகளுடன் கள்ளுக்கடை மேடு பேருந்து நிறுத்தத்தில் வந்து சசிகலா இறங்கியுள்ளார்.

அப்போது அதன்யா ஸ்ரீ எதிர் திசையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனது தந்தையை பார்த்ததும் வேகமாக ஓடி சென்றார். அப்போது பெருந்துறை நோக்கி சென்ற ஏடிஎம்- மிக்கு பணம் நிரப்பும் வாகனம் குழந்தை மீது மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியாடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி மைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.