திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் நேற்று முன்தினம் தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 4 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்த விஷப்பாம்பு சிறுவனை கடித்தது. இதனால் கண்விழித்து எழுந்த சிறுவன் தனது பெற்றோரிடம் ஏதோ என்னை கடித்து விட்டது என கூறி அழுதான்.

இதனால் பெற்றோர் வீட்டில் அனைத்து இடங்களில் தேடி பார்த்தும் பாம்பை கண்டுபிடிக்க இயலவில்லை. நேற்று காலை உடம்பில் வீக்கம் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகனை பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.