ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஒரு வருட காலமாக  நமக்கென்று ஒரு பத்திரிக்கை வேண்டும். நாளிதழ் வேண்டும் என்று நம்முடைய அன்பு  கழக உடன்பிறப்புகள் கோரிக்கை வைத்த வண்ணம்  இருந்தார்கள். தொண்டர்களும் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தார்கள்.

உங்களுடைய கோரிக்கையை ஏற்று தான் இன்றைக்கு இந்த நமது புரட்சி தொண்டன் என்ற நாளிதழ்  உங்களால் உருவாக்கப்பட்டு,  அந்த நாளிதழ் முழு பரிணாம வளர்ச்சி அடைவதற்கு,  அதனுடைய ஆசிரியராக நம்முடைய அருமை அண்ணன் மருது அழகுராஜ் அவர்கள்  பொறுப்பினை ஏற்று இருக்கிறார்கள். அவர் பிறப்பால் பேச்சாளர்.. பிறப்பால் படைப்பாளி… இப்படி பல பரிணாமங்களை அவர் பெற்றிருக்கிறார்.

தன்னுடைய வாழ்நாளில் அவருடைய முழு பயன்பாடும் கழகத்தின் சார்பாக ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நமது புரட்சி தொண்டன் என்ற நாளிதழுக்கு முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நாம் அனைவருக்கும் இருக்குது. ஏன் என்று  சொன்னால் ? ஏற்கனவே கழகத்தினுடைய பத்திரிக்கையில் அவர் பணியாற்றி இருக்கிறார்.

எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக தன்னுடைய எழுத்தாற்றல் மூலம் அவர் நமது அம்மா பத்திரிகையை நடத்தியது நம் அனைவரும் நன்றாகவே தெரியும். அதிலும் தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாக…  தன்னுடைய அனைத்து படைப்பாற்றலும் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் அவருடைய பேனா  எழுதிக் கொண்டே இருக்கும். பேச்சும்  நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கொண்டே இருக்கும் என்பதை அறிந்து தான் அவருக்கு நம்முடைய கழகத்தில் இன்றைக்கு கொள்கை பரப்பு  செயலாளராக நாம் அவரை நிலையான இடத்தில் வைத்திருக்கிறோம் என தெரிவித்தார்.