தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து சோதனை நடத்தினர். அவர்களிடம் 5 கிலோ 700 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஒரு எடை எந்திரம் இருந்தது. இதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணராஜபுரம் 8வது தெருவை சேர்ந்த அற்புதராஜின் மகன் மைக்கேல் ராஜ்(30), அவரது தங்கை ஜெபா(27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மைக்கேல் ராஜ் மீது புதுக்கோட்டை, தாளமுத்து நகர், தூத்துக்குடி வடபாக்கம், தெர்மல் நகர் உள்ளிட்ட பல காவல் நிலையத்தில் ஏராளமான கஞ்சா வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவர்களுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணாநகர் விக்கி மற்றும் பிரகாஷ் குறித்தும் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.