ஈரோடு மாவட்டத்திலுள்ள சோளக்காளிபாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்(30) என்பது தெரியவந்தது.

கடந்த ஆறு மாதங்களாக கார்த்திக் பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் உடலை வாங்குவதற்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்ற அவரது உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது, கார்த்திக்கின் 2 மணிக்கட்டும் அறுக்கப்பட்டு ரத்த காயம் இருக்கிறது.

அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து ரயில்வே தண்டவாளத்தில் உடலை வீசி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்த பிறகு அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.