உத்தரப் பிரதேச போலீஸ் அதிகாரி ஒருவர், உடல் ஊனமுற்ற ஒரு பயணியை தோளில் தூக்கி நெரிசல் மிகுந்த ரயிலில் ஏற்றி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, இணையவாசிகளின் இதயங்களைத் தொட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரி அஸ்வனி குமார், படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தவித்த அந்த மாற்றுத்திறனாளியைப் பார்த்ததும், உடனடியாக அவரைத் தோளில் தூக்கி, கூட்டத்தை விலக்கி ரயிலுக்குள் பத்திரமாக ஏற்றினார். இந்த மனிதாபிமானச் செயல் “தூய்மையான மனிதநேயம்” எனப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
View this post on Instagram
அஸ்வனி குமார் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இந்த வீடியோவுடன், “உதவிக்கு பணம் தேவையில்லை, உதவும் இதயமே போதும்… அது உங்களிடம் உள்ளது” என உருக்கமாக எழுதியிருந்தார்.
“மனிதநேயத்தைவிட பெரியது எதுவும் இல்லை” எனும் தலைப்பும் இடம்பெற்றது. இணையவாசிகள், “இது தூய மனிதநேயம், சல்யூட் ஐயா”, “பலர் பார்த்து நிற்கும் உலகில் நீங்கள் உதவினீர்கள்”, “சீருடைக்கு மரியாதை, அந்த மனிதருக்கு கண்ணியம் கொடுத்தீர்கள்” எனப் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
