பாரம்பரிய நெல் ரக விதைகளை சேகரித்து பராமரிக்கும் விவசாயிகளுக்கு ரூபாய் 3 லட்சம் ஊக்கத்தொகை வழங்க தமிழக வேளாண் துறை முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது விவசாயம் என்பது அதிக அளவில் செயற்கை உரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வகையான உரங்களை, ஹைபிரிட் விதைகளை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் லாபம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பட்சத்திலும் கூட,  இயற்கை விவசாயத்தை விரும்பி செய்யக்கூடிய விவசாயிகளும் இக்காலத்தில் உண்டு.

இப்படியான மாற்று விவசாயம் முறைகளால் பாரம்பரிய விதைகள் எண்ணிக்கை என்பது தற்போது குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் ஒரு சில ரக நெல் விதைகள்  மிக கணிசமான அளவில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. இந்நிலையில் பாரம்பரிய நெல் ரக விதைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை 2023-24 காலகட்டத்தில் அமுல்படுத்த தமிழக வேளாண் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி,

மாநிலம் முழுவதும் தலா பத்து விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபாய் மூன்று லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதில் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரக விதைகளை சேகரித்து ஒவ்வொரு ஆண்டும் முறையாக பயிரிட்டு உற்பத்தி செய்து  ஒரிஜினல் விதையாக கண்காணித்து பராமரிக்க வேண்டும் என்பதே விதிமுறை. 

முக்கிய குறிப்பாக இவ்வகையான விதைகள் பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படும் போது எவ்வகையான செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.