கேரளாவின் கோட்டயத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் (IIIT) தீபாவளி கொண்டாட்டத்தில் எதிர்பாராத சாகசமாக மாறிய மாணவர்கள் ராக்கெட் வைத்து விளையாடும் வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் விழாக்கோலம் பூண்டிருந்த மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து, ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் ராக்கெட்டுகளை பறக்கவிட்டு உற்சாகம் என  நினைத்து ஆபத்தான  செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, ஒரு ராக்கெட் தற்செயலாக அறை ஒன்றுக்குள் நுழைந்து சிறிது நேரம் கொழுந்து விட்டு எரிந்து சிறிய அளவிலான தீ விபத்தை ஏற்படுத்தியது. இதில் சில பொருள்கள் எரிந்து சேதமாகி உள்ளன. மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் கூட, கொண்டாட்டங்களின் போது இதுபோன்று அஜாக்கிரதையாக செயல்படுவது ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் கெடுப்பதோடு ஆபத்தான நடைமுறைகளுக்கும் வழிவகுப்பதாக நெட்டிசன்கள்  இந்த வீடியோ குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.