IPL 2023 மிக சுவாரஸ்யமாக நடைபெற்று வரும் நிலையில் ரிங்கு சிங் மற்றும் ஹாரி புரூக் அதிகம் பேசப்படக் கூடிய கிரிக்கெட் வீரர்களாக மாறியுள்ளனர். 

பல கிரிக்கெட் போட்டிகள் இருந்தாலும் இந்தியர்கள் பெரிதும் விரும்புவது IPL  போட்டிகளைத் தான்.  இந்த ஐபிஎல் போட்டி மூலம்  தங்களுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வளர்ச்சி கண்டவர்கள் பலர் உண்டு. குறிப்பிட்டு கூற வேண்டுமேயானால் ஹர்திக் பாண்டியா, ருத்துராஜ், தமிழக வீரர் நடராஜன் உள்ளிட்ட பலரை கூறலாம். மிக விறுவிறுப்பாக  நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 இல் ரிங்கு சிங், ஹாரி புரோக் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் மிக அதிகமாக தற்போது பேசப்பட்டு வருகின்றனர். 

அதில், ஹாரி புரோக் ஐபிஎல் 2023இன்  முதல் சதத்தை அடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  கடந்த சில போட்டிகளில் தனது ஆட்டம் சரியாக இல்லை எனவும், தான் நினைத்த ரன்களை அடிக்க முடியவில்லை என  வருத்தம் அடைந்ததாகவும், இந்தியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வசைபாடியதாக வருத்தம் தெரிவித்த அவர் தனது அபரிவிதமான ஆட்டம் மூலமாக தன்னை இகழ்ந்தவர்களே தற்போது தன்னை புகழ்ந்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

அதேபோல ஒரு ஓவரில் குஜராத் அணியை கதி கலங்க செய்து பிரபலமான ரிங்கு சிங் அதே கொல்கத்தா அணியில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இந்த 6 ஆண்டுகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை பல நேரங்களில் தவறவும் விட்டுள்ளார். 

ஆனால் இம்முறை கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால், வெறும் ஒரு ஓவரில் அவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது என்றே கூறலாம். வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், நமக்கென வாய்ப்பு என்னும் பந்துகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டே வரும். 

அப்படி கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்திலும் சிக்ஸர்-க்கான முயற்சியில் ஈடுபட, நம்மை இகழ்ந்தவர்களே நம்மை புகழ்ந்திட, முன்னேற்றத்தை , வளர்ச்சியை நோக்கி நம் வாழ்க்கை நகர்ந்திட, லட்சியம் அடைந்திட நமக்குத் தேவையானது ஒரே ஒரு வாய்ப்பு தான். அந்த வாய்ப்பு  கிடைக்கும் வரை நமக்கு வேண்டியது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை,  தொடர் முயற்சி உள்ளிட்ட தகுதிகள் மட்டுமே.