ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான மோதலில், கலாசார ரீதியாக கிண்டல் செய்யும் விதமாகப் பாடல் ஒளிபரப்பப்பட்டதாக பிசிசிஐ-யிடம் (BCCI) சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது, மைதானத்தில் இருந்த ‘டிஜே’ (DJ), தென்னிந்திய கலாசாரத்தை மேலோட்டமாகச் சித்தரிக்கும் விதமாக “தோசை, இட்லி, சாம்பார்” என்ற பாடலை ஒளிபரப்பினார். இது சென்னை வீரர்களையும் ரசிகர்களையும் கிண்டல் செய்வது போல் அமைந்துள்ளதாகவும், ஆரோக்கியமான பொழுதுபோக்கு வரம்பை மீறிவிட்டதாகவும் சிஎஸ்கே தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மைதானத்தில் இசைக்கப்படும் பாடல்கள் கண்ணியமான முறையில் இருக்க வேண்டும்; இது போன்ற செயல்கள் வீரர்களை அவமதிக்கும் விதமாக உள்ளன” என்று சிஎஸ்கே தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது. இந்த சர்ச்சை ஒருபுறம் வெடிக்க, ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா சென்னை குறித்துப் பேசும் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2025-ன் போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஜித்தேஷ் சர்மா இதே “தோசை, இட்லி, சாம்பார், சட்னி” என்ற பாடலை ஏளனம் செய்யும் தோனியில் பாடியது பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு அவர் சேப்பாக்கம் மைதானத்தில் அவுட் ஆகி வெளியேறியபோது, அங்கிருந்த டிஜே அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அதே பாடலை இசைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே பாடல் பெங்களூரு மைதானத்தில் ஒலிக்கப்பட்டிருப்பது, கடந்த கால கசப்பான சம்பவங்களின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

 

சிஎஸ்கே நிர்வாகம் அளித்துள்ள புகாரில், பாடல் மட்டுமல்லாமல் மைதானத்தில் சில தனிப்பட்ட கருத்துகளும் எல்லை மீறிச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ (BCCI) தனது அறிக்கையில், “புகார் கிடைத்துள்ளது; இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளது. மேலும் கிரிக்கெட் களத்தில் நிலவும் போட்டி, தற்போது கலாசார ரீதியிலான கிண்டலாக உருவெடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் கிண்டல் என்பது இயல்பு என்றாலும், அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கலாசாரத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.