சட்டம் என்பது சமுதாயம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளை கொண்டது. இதில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய குறிப்பாக பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய சட்டம் போஸ் சட்டம் (POSH ACT). பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம் தான் போஸ் சட்டம்.

இந்த சட்டம் 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013ன் படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் பற்றி புகார் தெரிவிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு தற்போது அது நடைமுறையிலும் இருந்து வருகிறது.

பத்து பெண் ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விசாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். கமிட்டியில் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

ஒரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல் தன்னார்வத் தொண்டு அமைப்பு செயலாளராக இருக்க வேண்டும். இந்த கமிட்டி ஆண்டு தோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். பெண் ஊழியரை தொட்டு பேசுவது, அவரை பாலியல் ரீதியாக அணுகுவது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசுவது, ஆபாசமான படங்களை காட்டுவது உள்ளிட்டவை பாலியல் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.

பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் என்ன வகையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் வகுத்து அதை சுற்றறிக்கை மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாக கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அலுவலகங்களில் பெண்கள் ஏதேனும் இன்னல்களுக்கு ஆளானால் தங்களின் வழக்கறிஞரை அணுகி இந்த சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.