தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் உலகம் முழுதும் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் 2-ம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் ஹாங்காங்கில் நடைபெறும் 16-வது ஆசிரிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பல பிரிவுகளில் தேர்வாகியுள்ளது.

அதன்படி 16-வது ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த படம் பொன்னியின் செல்வன், சிறந்த  இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி, சிறந்த எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சிறந்த ஒளிப்பதிவு ரவிவர்மன், சிறந்த ஆடை வடிவமைப்பு ஏகா லக்கானி ஆகிய 6 பிரிவுகளின் கீழ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பாளர் சுபாஷ் கரன் சார்பில் ஜி.கே.எம் தமிழ்குமரன், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்தினம் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த், ஸ்ரீகர் பிரசாத், ரவிவர்மன் ஆகியோர் ஹாங்காங்குக்கு சென்றுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மார்ச் 12-ம் தேதி அதாவது நாளை ஆசிய‌ திரைப்பட விருதுகள் விளங்கும் விழா நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.