தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள அக்காநாயக்கன்பட்டியில் சுமார் 650 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியுள்ள ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சில பிரச்சினை காரணமாக, அங்குள்ள கோவிலை நிர்வகிப்பதில் இருவேறு பிரிவுகளாக உள்ளனர். இது தொடர்பான விசாரணையானது கோவில்பட்டி உதவி கலெக்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அப்போது கோவில் தொடர்பாக யாரும் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உயர்நிலைப் பள்ளி முன்பு மாணவர்களுக்கான விளையாட்டு விழாவானது 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடத்த ஒரு பிரிவினர் அனுமதி கோரியிருந்தனர்.

உடனே இதை பரிசீலினை செய்த தாசில்தார் நிஷாந்தினி, 15- ஆம் தேதி ஒரு நாள் மட்டும் விழா நடத்திக் கொள்ளுமாறு அனுமதி வழங்கினார். இதையடுத்து அனுமதி பெற்ற பிரிவினர் நேற்று முன்தினம் (15.1.22) காலையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக தயார்படுத்தியுள்ளனர். அப்போது மற்றொரு பிரிவினர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவலறிந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர்களுக்கு பதிலாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் பங்கேற்றதை அறிந்தனர். இச்சம்பவம் குறித்து எதிர்த்தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதன் பின் விளையாட்டுப் போட்டிக்கான அனுமதியை ரத்து செய்யப்படுவதாக போலீசார் அறிவித்ததை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.