திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரியநாச்சி பாளையம் நெசவாளர் காலனி சதீஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பூரில் இருந்து தனியார் பேருந்தில் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுக்கு சென்றுள்ளார். மாநாடு முடிந்ததும் அனைவரும் அதே பேருந்தில் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே இரவு உணவு சாப்பிடுவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது.

அப்போது சதீஷ்குமார் கீழே இறங்கி எதிரே இருக்கும் ஹோட்டலுக்கு செல்ல கோவை-சேலம் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அதே சமயம் அந்த வழியாக வந்த அரசு பேருந்து சதீஷ்குமார் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சதீஷ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.