திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் ஏழு ரோடு சந்திப்பு அருகே காஷ்மீரை சேர்ந்த அகமது ராஜா, அவரது சகோதரர் சபீர் அகமது ஆகியோர் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடையை இரண்டாக பிரித்து வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் கடை வழியாக மழைநீர் செல்வதில் சகோதரர்கள் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த அகமது ராஜா நேற்று முன்தினம் தனது கடைக்கு முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகமது ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.