திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிந்துவம்பட்டியில் விவசாயியான பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டியராஜன் தனது மகளுக்கு காதணி விழா நடத்திய போது மைத்துனர்களான கருப்பையா, மாயவன் ஆகியோர் சீர்வரிசை பொருட்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். அந்த ஊர்வலம் சிந்துவம்பட்டி மெயின் ரோட்டில் வந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த மகேஷ் மீது மேளம் அடித்து வந்த குழுவைச் சேர்ந்த ஒருவர் மோதியதாக தெரிகிறது.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதால் மாயவன், கருப்பையா ஆகியோர் சமாதானம் செய்தனர். நேற்று முன்தினம் பாண்டியராஜன் மண்டுக்கல் அருகே நின்று கொண்டிருந்த போது மகேஷ் மற்றும் அதே ஊரில் வசிக்கும் தசரதன், வடிவேல், தங்கபாண்டி உள்ளிட்ட 11 பேர் பாண்டியராஜனிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற மாயவனுக்கும் அடி விழுந்தது. இதனால் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் மகேஷ் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.