கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் காந்தி நகரில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசாந்த் மயிலாடும்பாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னர் சம்மதம் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் பிரசாந்தின் காதலிக்கு பிறந்தநாள். இதனால் பிரசாந்த் நண்பர்களுடன் மது குடித்துவிட்டு கேக் வாங்கிக்கொண்டு தனது காதலியின் வீட்டு சுவர் ஏறி குதித்து நள்ளிரவில் கதவை தட்டி உள்ளார். அப்போது காதலியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு பிரசாந்த் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் இளம் பெண்ணின் தாய்மாமன் விக்னேஷ் பிரசாந்தை அரிவாளால் வெட்டினார். இதனால் படுகாயம் அடைந்த பிரசாந்த் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரசாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் வீட்டில் இருந்த சாணி பவுடரை கரைத்துக் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.