தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவில் கூலி வேலை பார்க்கும் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேர்மன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேவர் பிளாக் கல் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற சேர்மன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தபோது ஊருக்கு அருகே இருக்கும் மாட்டு கொட்டகையில் சேர்மன் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சேர்மன் ஒரு பெண்ணை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அந்த காதலுக்கு இரு வீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் சேர்மன் தற்கொலை செய்து கொண்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.