விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் கலுவு (80)- மணி(65) தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 16-ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கலுவுவின் மகன் வழி பேரனான அருள் சக்தி என்பவர் தனது தாத்தா, பாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. அவரை தனிப்படை போலீசார் கோவையில் வைத்து மடக்கி பிடித்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது கலுவு-மணி தம்பதியினருக்கு 3 மகன்களும், ஒரு மகளும், 10 பேரன் பேத்திகளும் இருக்கின்றனர். இவர்களது பெயரில் வீட்டிற்கு அருகில் 3 சென்ட் மனை இருக்கிறது. இந்நிலையில் கூலி வேலை பார்த்து வரும் அருள் சக்தி வீட்டையும், வீட்டுமனையையும் தனது பெயருக்கு எழுதி தருமாறு தாத்தா பாட்டியை தொந்தரவு செய்துள்ளார். அவர்கள் சொத்தை எழுதி கொடுக்கவில்லை.

இதனையடுத்து மது குடிப்பதற்கும் பணம் கேட்டு அவர்களை தொந்தரவு செய்துள்ளார். சம்பவம் நடந்த அன்று பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் அருள் சக்தி கோபத்தில் மதுவை குளிர்பானத்தில் கலந்து தனது தாத்தாவை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதனை தடுக்க வந்த மணியையும் அருள் சக்தி கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.