கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் அசோக் நகரில் தீபக்(32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷினி(27) என்ற மனைவி உள்ளார். இவர்கள் நகை பட்டறையில் தயாரிக்கும் தங்க நகைகளை வாங்கி கடைகளில் கொடுத்து விற்பனை செய்து வந்தனர். இதற்காக அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் கடந்த ஜனவரி மாதம் 5- ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி வரை ஆர்.எஸ் புரம், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் நகை பட்டறையில் இருந்து தங்க நகைகளை விற்பனை செய்து தருவதாக கூறி வாங்கி வந்தனர்.

ஆனால் நகைகளை விற்று அதற்கான பணத்தை உரிய நபர்களிடம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக கேட்டபோது கணவன், மனைவி இருவரும் சரியான பதில் அளிக்கவில்லை. அப்போதுதான் சுமார் 2 கிலோ 51 கிராம் நகைகளை கணவன், மனைவி இருவரும் விற்பனை செய்து தருகிறோம் என கூறி மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.