சென்னை மாவட்டத்தில் உள்ள துரைப்பாக்கத்தில் இருக்கும் தனியார் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த சத்ய சாய் என்பவர் நண்பர்களுடன் விடுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யசாயின் தோழிக்கு கோயம்பேடு 100 அடி சாலையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து சினிமா பாடல்களுக்கு சத்யசாய் தனது நண்பர்களுடன் உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்த போது திடீரென சுருண்டு விழுந்தார்.

மேலும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு காதிலிருந்து ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக சத்யசாயை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சத்யசாய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சத்தியசாய் ரெட்டி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.