மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் திருநகரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான சீதாராமன்(61) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் கமுதியை சேர்ந்த சந்தோஷ்(32) என்பவர் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் வயல் வயது முதிர்வு காரணமாக சீதாராமன் வீட்டில் இருந்து வெளியே செல்வதில்லை. இதனால் சந்தோஷ் தனது வங்கி கணக்கு மற்றும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி சீதாராமனுக்கு அவ்வபோது பணம் எடுத்து கொடுத்து உதவி செய்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 6 மாதங்களாக சீதா ராமனின் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் திருமங்கலத்தில் இருக்கும் வங்கியில் 5 லட்சம் ரூபாய் எடுப்பதற்கு சீதாராமன் காசோலை கொடுத்துள்ளார். அப்போதுதான் வங்கி கணக்கில் பணம் இல்லை என்பது சீதாராமனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து சந்தோஷிடம் கேட்டதற்கு அவர் எனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். இது தொடர்பாக சீதாராமன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் நேரில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான சந்தோஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.