விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண் கோவை மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, டெய்லரான நான் திருப்பூருக்கு வேலை தேடி சென்றேன். என்னை 15 நாட்கள் கழித்து மீண்டும் வர சொன்னார்கள். இதனால் சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன்.

அங்கு வந்த ஒருவர் என்னிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எனது பெயர் சரண் (30). நான் திருப்பூரில் இருக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன் என கூறினார். எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனதால் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தோம்.

அதற்காக தாலி, வளையல், மெட்டி உள்ளிட்ட பொருட்களை வாங்கி திருமணம் செய்து கொள்வதற்காக கோவைக்கு வந்தோம். அவர் என் காலில் மெட்டி, வளையல் அணிவித்து விட்டார். அதன் பிறகு கோவை ரயில் நிலையம் அருகே இருக்கும் லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம். பின்னர் அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்தார்.

இதனையடுத்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் எனக் கூறிய போது கரூரில் இருக்கும் எனது பெற்றோர் முன்பு திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் என்னை ஈரோட்டுக்கு பேருந்தில் அழைத்துச் சென்று எனக்கு ஒருவர் 60,000 ரூபாய் தர வேண்டும், அது கிடைத்தால் திருமண செலவுக்கு உதவும் என கூறியதோடு, என்னிடமிருந்து 4000 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டார்.

இதனையடுத்து கழிவறைக்கு சென்று வருவதாக கூறிய சரண் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என வந்தது. எனவே திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்து பேருந்து நிலையத்தில் என்னை விட்டு சென்று சரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சரணை தீவிரமாக தேடி வருகின்றனர்.