கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அந்த விசாரணையில் டிரைவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பது தெரியவந்தது. அந்த லாரி மதுரை சிக்கந்தர்புரத்தைச் சேர்ந்த ஊறுகாய் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்நிலையில் நிறுவனத்தில் இருந்து ஊறுகாயை சிதம்பரம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் கடைகளில் இறக்கிவிட்டு மதுரை நோக்கி செல்வதாக கலைச்செல்வன் தெரிவித்தார்.

அப்போது புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு செல்பவர் ஏன் திண்டிவனம், செஞ்சி வழியாக திருக்கோவிலூர் பகுதிக்கு வந்தார்? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் லாரியை முழுவதுமாக சோதனை செய்து பார்த்தனர். அப்போது சினிமா பட பாணியில் 13 அட்டை பெட்டிகளில் விலை உயர்ந்த மது பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கலைச்செல்வனை கைது செய்தனர். மேலும் மது பாட்டில்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.